சிறிதரன், சுமந்திரன் இருவருமே ஒற்றுமையை விரும்பாதவர்களாம்! விந்தன் கனகரட்ணம் சாடுகிறார்
தமிழரசுக் கட்சியின் தலைமை வேட்பாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும் ரெலோவின் நிதிச் செயலாளருமான விந்தன் கனகரட்னம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழரசுக் கட்சியுடைய தலைவராக யார் வந்தால் ஒற்றுமையுடன் செயற்படலாம் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பது அவர்களுடைய கட்சி தீர்மானித்துக் கொள்ளட்டும். ஆனால் இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு எதிராகச் செயற்பட்டவர்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தொடரில் நான் அதிகம் கூற வேண்டிய தேவையில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 2018 பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவிப்பின் போது மூன்று பிரதேச சபைகளில் சக காட்சிகளுக்கு ஆசனம் வழங்க மறுத்து விட்டார்.
தான்தான் கிளிநொச்சி நாட்டாமை என நினைத்து தனது ஆதரவாளர்களையே வேட்பாளராக்க வேண்டும். சகா தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என நினைப்பவர் எவ்வாறு ஒற்றுமையை விரும்புவார்?
தமிழரசு கட்சியின் தற்போதைய தலைவராக இருக்கும் மாவை சேனாதிராசா உண்மையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புபவர்.
அவர் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் எத்தனையோ விடயங்களில் அவருக்கு எதிராக அவருக்குத் தெரியாமல் பல செயல்பாடுகளை இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்தவர்கள்.
நாங்கள் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறவர்கள். மக்களின் விருப்பங்களுக்கு மாறாகவும் எமது கொள்கைகளுக்கு புறம்பாகவும் செயற்படக்கூடாது.
உதாரணமாக கூறின் தமிழ் மக்களின் தீர்வாக அமையாத 13 ஆவது திருத்தத்தை கூட சிங்கள தலைமைகள் வழங்கக் கூடாது என்பதில் ஒற்றுமையாக நிற்கிறார்கள்.
தமிழ் மக்களுக்காக அரசியல் செய்கிறோம் என கூறும் சக தமிழ் கட்சிகள் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் நிலையில் இது எம்மை தெற்கு கையாள்வதற்கு ஏற்றதாக அமைகிறது.
ஆகவே தமிழரசு கட்சியின் உடைய தலைவர் யார் என்பதற்கு அப்பால் சக தமிழ் கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் மக்களின் குரலாக ஒளிப்பவர்கள் தான் தலைமை பதவியில் இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை